சில நாட்களுக்கு முன்பு லண்டன் ஒலிம்பிக் பாக்சிங் போட்டியில், 60 கிலோ எடை பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ஜெய் பகவான் பங்கேற்றிருந்தார்..
27 வயதாகும் இவர் இதுவரை கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் தவித்தவர்.. தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவர்..
ஜெய் பகவான் முதல் சுற்றில் 19 வயதே ஆனா செஷல்ஸ் நாட்டின் வீரரை எதிர் கொண்டு அந்த போட்டியில் 18-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றியையும் சுவைத்தார்..
ஆனால் 19 எங்கே ?? 27 எங்கே ??
என்ன தான் ஒரே எடையாக இருந்தாலும், 19 வயது வீரருக்கு 27 வயது வீரரை கண்டால் பயம் நிச்சியம் இருக்கும்.. அந்த பயமே அவனுக்கு எதிரியாகி விட, தோல்வி நிச்சியம் என்ற எண்ணம் போட்டி ஆரம்பிக்கும் முன்னரே மனதில் பதிந்து விடும்..
இதற்க்கு நானே சிறந்த உதாரணம்... ஒரு சின்ன ப்ளாஷ் பாக் .. அப்போ நான் மூணாவது படிச்சிட்டு இருந்தேன்.. (பயப்படாதீங்க சீக்கிரம் முடிச்சிடுறேன்)
பள்ளியில், நண்பன் ஒருவன் என்னை அடித்துக்கொண்டே இருக்கிறான், கோவத்தில் திருப்பி அடித்தால் இன்னும் பயங்கரமா அடிக்குறான் என்று என் வீட்டில் கூறி வந்தேன் ..
சும்மா விடுவாரா என் தந்தை, என்னை உடனே கராத்தே கிளாசில் சேர்த்து விட்டார் .. கராத்தே மாஸ்டர் என் தந்தையின் நெருங்கிய நண்பர் ..
வாரம் தோறும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், காலை மற்றும் மாலையில் வகுப்பு நடைபெறும் .. என்னுடன் கிட்டத்தட்ட 30 நண்பர்கள், பலரிடம் அடிவாங்கிய காரணத்தினால் வகுப்பில் சேர்ந்தனர்..
மூன்றாம் வகுப்பில் தொடங்கிய பயிற்சி சிறிது சிறிதாக சூடேறியது.. நான் ஏழாவது படிக்கும்போது திருச்சியில் மாநில அளவில் ஒரு கராத்தே போட்டி நடைபெற்றது..
என் மாஸ்டரும் இம்முறை நான் களத்தில் இறங்க தயாராக இருப்பதாக கருதினார். இத்தனை வருட பயிற்சிக்கு பின், முதல் முறையாக களத்தில் நேருக்கு நேராக மோதுவதை நினைத்து உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி..
நாங்கள் மொத்தம் 15 நபர்கள் போட்டிக்காக மாஸ்டருடன் திருச்சி சென்றோம்
கராத்தே போட்டியில் இரு வகை உள்ளது ..
1. Kumite/Sparring - http://en.wikipedia.org/wiki/Kumite
2. Kata - http://en.wikipedia.org/wiki/Karate_kata
நான் கலந்து கொண்டது "ஸ்பாரிங்". இரண்டு நிமிடங்கள் கொடுக்கப்படும், அதில் அதிக புள்ளிகளை பெரும் வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கபடுவார் ..
காலை 11 க்கு போட்டி நடைபெறும் திருவெறும்பூருக்கு சென்றோம் .. அங்கே பேருந்தை விட்டு இறங்கியதும் சாலையோரத்தில் ஒரு மாமிச உணவகத்தை பார்த்தேன் ..
வெளியில் ஒரு கண்ணாடி கூண்டில் நெருப்பில் பொறித்த கோழியை கம்பியின் நடுவே சொருகி வைத்திருந்தார்கள்.. அருகே ஒரு விளம்பர பலகையில் சிக்கன் பிரியாணியின் போட்டோ வேறு..
என்னத்த சொல்ல என் மனசு என்கிட்டே இல்ல ..
உடனே என் மாஸ்டரிடம், பிரியாணி வேணும் என்றேன்.. அவர் அப்படியே ஷாக் ஆகிட்டார் போல ..
டேய் இப்போ தான கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திருச்சி பஸ் ஸ்டான்ட்ல இட்லி / தோசைன்னு சாப்பிட்ட அதுக்குள்ள என்னடா பிரியாணின்னு ஒரு மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு கேட்டார் ..
பிறகு வாங்கி தரேன்/ தரமாட்டேன்னு எதுவுமே சொல்லாம என்ன கூட்டிகிட்டு போட்டி நடைபெறும் அரங்கத்துக்கு சென்றார்...
அங்கே சென்றதும், ஸ்பாரிங் போட்டியாளர்களுக்கு எடை சோதனை நடைபெற்றது -- அப்பொழுது என்னுடைய எடை 42, ஆகவே நான் 40-45 இடை பிரிவில் போட்டியிட்டேன்..
போட்டிகள் பொதுவாக இரண்டு நாட்கள் நடைபெறும் .. என்னுடைய போட்டி இரண்டாவது நாள் தொடங்கியது ..
முதல் இரண்டு சுற்று எனக்கு எளிதாகவே இருந்தது..மேலும் போராடி படி படியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றேன்.
இப்போது தான் எனக்கு பிரச்சனை ஆரம்பமாயிற்று..
அரையிறுதி சுற்றில் என்னுடன் மோத ஆயுத்தமானது B.com இரண்டாவது வருடம் படிக்கும் நபர்.
12 வயது எங்கே ?? 19 வயது எங்கே ??
அந்த பிரதரோட மீசையை பார்த்தே எனக்கு தோல்வி பயம் வந்து விட்டது.. நல்ல உசரம் வேறு.. பயபுள்ள எடைய மட்டும் கம்மியாவே மைண்டைன் பண்ணியிருக்கான் என் உசுர வாங்க ..
ஒரு பயத்திலேயே அந்த சுற்றில் தோல்வியடைந்தேன் ..ரெண்டு நிமிஷத்துக்கு எவ்ளோ அடி வாங்க முடியுமோ அவ்ளோவும் வாங்கிட்டு என் மாஸ்டரிடம் அழுதவாறே வந்து சேர்ந்தேன்..
என்னை என் நண்பர்கள் சூழ்ந்திருக்க, இப்போ எதுக்கு அழுவுற என்றார் என் மாஸ்டர்.
பின்ன ?? தோத்தது கூட அசிங்கமா படல .. ஆனா அவன ஒரு அடி கூட அடிக்க முடியாம போனது தான் வருத்தம்.
"டேய் உனக்கு இன்னும் மூணாவது இடத்துக்கான மேட்ச் இருக்கு டா.. இவன் மேல இருக்குற கோபத்தை எல்லாம் அவன் மேல காட்டு போ " என்றார்
கொஞ்சம் அமைதியானேன், மீண்டும் போட்டிக்கு என்னை தயார் படுத்திக்கொண்டேன்..
என் முதல் டோர்னமென்ட், இவ்ளோ தூரம் வந்தாச்சி.. எப்படியாவது ஒரு பதக்கம் வாங்கிடனும்ன்னு தோனுச்சி..
மூன்றாமிடதுக்கான போட்டி தொடங்கியது, இப்பொழுது என்னுடைய எதிரிக்கு 17 வயது.. ஒரு டவுட்டா என் மாஸ்டர "மறுபடியுமா??" என்றவாறு திரும்பி பார்த்தேன்
என்னை அருகில் அழைத்தவர், "டேய் இந்த மேட்ச்ல மட்டும் ஜெய்ச்ச, உனக்கு நிச்சையம் சிக்கென் பிரியாணி வாங்கி தரேன்" என்றார்..
இது போதாதா நமக்கு,
அந்த போட்டியில் ஒரு அடி கூட மேலே வாங்காமல் வெற்றி பெற்றேன்..
மேட்ச் முடிந்ததும் என்னுடைய ஆப்போனன்ட் அவன் மாஸ்டர் கிட்ட கன்னத்துல வாங்கின அப்பு இப்போ கூட நியாபகம் இருக்கு ..
எனக்கு பிரியாணி மாதிரி,அந்த செஷல்ஸ் வீரருக்கு எதவாது இருந்திருந்தா ஒரு வேல நம்ம ஆளுக்கு டண்டனகான் தானோ :P
* I will update the blog with my karate pics later
* வேற என்ன டைட்டில் வைக்கறதுன்னு தெரியாம வச்சிட்டேன் என்ன விட்டுடுங்க :P