Wednesday, October 27, 2010

என்திசை வீசா தென்றல்

எவ்வளவு நாள்?


வசந்தம் போய் கோடையும் வந்து விட்டது. 
 
துவைக்கப் பட்ட கருஞ்சேலையாய் சாலை ஈரத்தில் மின்னிக் கொண்டிருந்தன. வழுக்கிக் கொண்டிருக்கும் வாகனங்களின் மறுபுறம் செவ்வண்ண தென்றலாய் அவள். நான் பார்க்க.. நான் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் தென்றல் பேருந்தில் ஏறும் வரை. மழைக் காலத்தில் சாரல் தானே அடிக்கும்.. எங்கிருந்து தென்றல் வந்தது என என்னால் யோசிக்க முடியவில்லை. 

ஒருவேளை செவ்வண்ணம் என்னுள் வானவில்லை தோற்றுவித்திருக்கலாம். கடைசியில் நானுமா? ஆனால் வெளியில் தெரிந்தால் தானே நான் நாண வேண்டி இருக்கும் என பீறிட்டு எழும் கவிதை எழுதும் ஆசையையும் அடக்கிக் கொண்டேன்.

நான் சாப்பிடும் அளவு குறைகிறதா, தூக்கம் சரியாக வருகிறதா, காதல் பாட்டு பிடிக்கிறதா என என்னை உள்நோக்கி பார்த்தேன். வானவில்லும், மழையும் ஒருங்கே தெரிந்தது. ம்ம்.. நடப்பவை எல்லாம் இயற்கைக்கு மாறாகவே நடக்கின்றன.

அக்னி நட்சத்திரம் அனைத்தையும் எரித்து விடுவது என தீர்மானித்து விட்டது போலும். பாவம் என்னை அன்று தாக்கிய தென்றல் முக்காடு போட்டு கொண்டு  'தேமோ'வென வெயிலில் சென்றுக்கொண்டிருந்தது.பாரதியார் பாடல் எல்லாம் என்னவளுக்கு பரீச்சயம் இல்லை போலும்.பெரும்பாலும் அவள் பாதம் பார்த்தே நடக்கிறாள். நான் பின் தொடர்கிறேன் என்று எப்படி தான் நான் தெரியப்படுத்துவேன்? 

அலையோ  அலை என அலைந்து,தென்றலைக் குறித்து எந்தவொரு தொல்லை தரும் நண்பர்களின் உதவியுமில்லாமல் தெரிந்துக் கொண்டேன். தென்றலின் வழியில் எந்த இடைஞ்சலும் இல்லை என தெரிந்துக் கொண்டு அகமகழிந்த நொடியில் வசந்தம் பிறந்தது.

பருவங்கள் மாறுகின்றன.ஆனால் இன்னும் முதல் படியிலேயே நின்றுக் கொண்டிருக்கிறேன்.எவ்வளவு நாள் தான் இப்படியே!! என்னையும் மீறி கண்கள் கலங்கி விடும் போல.எவரையோ பார்ப்பது போல் அவள் என்னை ஒரு முறை பார்த்து விட்டாலும் கூட போதும்.ஒரு நம்பிக்கை துளிர்க்கும். ச்சே..இந்த வெயிலும்,வியர்வையும் என்னை மேலும் சோர்வும்,எரிச்சலடைய செய்கின்றன.இன்று கூட அவள் திரும்பவில்லை எனில்..நினைத்து பார்க்கவே அழுகை,அழுகையாக வருகிறது. 

சடசடவென்று ஆலங்காட்டி மழை திடீரென பெய்தது. இருக்கும் வெப்பத்தை மேலும் கிளறுகிறது.மழை நல்லதுக்கு தான் என்றாலும், அவளும் நனைவாளே என்று கவலையாக இருந்தது.ஆனால் அவளோ மிக குதூகலமாய்,முகத்தில் வழிந்த நீரை வழித்து வானத்தை நோக்கி வீசி எறிந்தாள்.எவ்வளவு அழகு? ஒரு குழந்தையின் துள்ளல் போல!!!.


சட்டென்று மழை நின்றது.கிளறப்பட்ட வெப்பம் மட்டும் அலையாய் எழுகின்றது.துப்புக் கெட்ட மழை. ஊருக்கும் நல்லது செய்யவில்லை. என்னவளையும் அதிக நேரம் மகிழ்விக்கவில்லை. என்னை பார்க்காத அவள் மகிழ்ச்சியில் வானத்தை பார்த்தாள்.ஆனால் இந்த மழையோ..

ஒரு நிமிஷம்.. ஒரு நிமிஷம்..

அவ்வ்.. ஒருவேள இப்படி இருக்குமோ? அவள் கண்டுக்கொள்ளவில்லை என்பதால் சுட்டெரிக்கும் ஆதவன் மனம் வருந்தி அழுது, பிறகு என்னவள் பார்த்தவுடன் அழுகையை நிறுத்தி இருக்குமோ!!


Thursday, October 14, 2010

விக்ரமுக்கு ஒரு சவால் (சவால் சிறுகதை)

கல்லூரி முடிந்ததும் வேகமாக வீட்டுக்கு வந்தவன் லுங்கி ஒன்றை கட்டிக்கொண்டு கடையை நோக்கி நடந்தான்.அன்று அவன் தந்தை ஏதோ சற்று களைப்புடன் காணப்படவே,"அப்பா நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்" என்றான் விக்ரம்.

மாலை நேரம் என்பதால் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய கட்டாயம், விக்ரமுக்கு இது  பழகிய ஒன்று தான் ஆகவே திறமையாக வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான். கடைக்கு வருபவர்கள் 98 சதவிகிதம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களே என்பதால் அவர்களுடன் சிரித்து உரையாடியபடியே வேலைகளை செய்தான்.

இரவு மணி 8 ஆக வாடிக்கையாளர்களின் வருகை சற்று குறைந்திருந்தது. விக்ரம் அவன் தந்தை அருகே இருந்த ஒரு ஸ்டூலில் அமர்ந்துக்கொண்டு  ஒரு வார இதழை புரட்டி கொண்டிருந்தான்.சினிமா பற்றிய செய்திகளை தேடி தேடி படித்துக்கொண்டிருந்தவன் ஒரு பக்கத்தில் சிறுகதை போட்டிக்கான விளம்பரத்தை கண்டான்.அதை மீண்டும் ஒரு முறை முழுவதாக படித்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.

“என்னடா தனியா சிரிசிகிட்டு இருக்க??“என்று அவன் தந்தை கேட்க,


"ஒன்னுமில்லப்பா,ஒரு சிறுகதை போட்டிக்கான விளம்பரத்த பார்த்தேன் அதுல தங்கச்சி  காமினியோட பெயர் கூட ஒரு கேரக்டரா இருந்துச்சி அதான் சிரிச்சேன்"என்றான்.

"அட சிறுகதை போட்டியா!! எங்க அந்த விளம்பரத்தை வாசி கேட்போம்".

விக்ரம் விளம்பரத்தை வாசிக்க தொடங்கினான்,

"தமிழ்க்களஞ்சியம் குழுவினர் நடத்தும் சிறுகதை போட்டி.


போட்டிக்கான விதிமுறைகள் பின் வருமாறு

கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:

1)
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

2) “
ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலைஎன்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

3) “
காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியேஎன்று பாராட்டினார் பரந்தாமன்.

இந்த மூன்று வாக்கியங்களும் கொடுத்திருக்கும் வரிசைப்படியே வருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதி நவம்பர் 1 க்கு முன் அனுப்பிவைக்கவும்.

கதையை எழுதி அனுப்பவேண்டிய முகவரி,
தபால் பெட்டி என் 4,
தமிழ்க்களஞ்சியம் குழு,
வளசரவாக்கம்,
சென்னை.

இதனை கேட்டுக்கொண்டிருந்த விக்ரமின் தந்தை, "நீ ஏண்டா ஒன்னு எழுதி அனுப்ப கூடாது??" என்றார்.

என்னது நானா!! இதுவரைக்கும் நான் எந்த ஒரு கதையும் எழுதியதே கிடையாதே!! இந்த போட்டிக்கு வேற பல பேர் எழுதுவாங்க இதெல்லாம் எனக்கு சரிபட்டு வராதுப்பா.

"டேய் B.A தமிழ் படிக்குற,போட்டியில கலந்து தான் பாரேன்.முயற்சி செய்தா தானே முடிவு எப்படி இருக்குன்னு தெரியவரும்".

அதெல்லாம் சரி,ஆனா இதை எப்படி ஆரம்பிக்க நான் ?

"ஹ்ம்ம்,அவங்க தந்துள்ள வாகியங்கள வச்சி பாக்கும் போது, எழுதுறவங்க ஒரு த்ரில்லர் அல்லது ஆக்ஷன் கதைய தான் எழுதுவாங்கன்னு தோணுது. அதுல இருந்து விலகி,நீ கொஞ்சம் வித்யாசமான கோணத்துல யோசிச்சி  பார்டா.மூளைக்கு கொஞ்சமாவது வேலைய கொடு".

"மூளையா??அப்படி ஒன்னு நிஜமாவே என்கிட்ட இருக்கா !!!" என்று தன்னையே கேட்டுக்கொண்டான். 

சரி பரிசு என்ன சொல்லியிருக்காங்க??

முதல் பரிசா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புஸ்தகம் தராங்க. இரண்டாவது  பரிசா ஐநூறு ரூபாய் மதிப்புள்ள புஸ்தகம் தராங்க.

"அட அருமை போ.யோசிச்சி ஒரு நல்ல கதையை எழுதி என்கிட்ட காட்டு. இதை உனக்கு ஒரு சவாலா எடுத்து செய்வியாடா??"என்று அவர் கேட்க, எங்கோ கண்களை அலைய விட்டுக்கொண்டிருந்த விக்ரம் தலையை மட்டும் ஆட்டினான்.

அப்பொழுது கடையிலிருந்த கலைஞரின் இலவச தொலைக்காட்சி பெட்டியில் "கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்" பாடல் ஒலிக்க, பக்கத்து வீட்டு ஜானகி கடையை ஓரக்கண்களால் பார்த்தபடியே கடந்தாள்.

Wednesday, October 13, 2010

நடுநிசி மர்மம் (சவால் சிறுகதை)

"இப்போ நாம தயார் செய்துள்ள இந்த PX+ மருந்தை குரங்கு மேல செலுத்தி பரிசோதனை செய்து வெற்றியும் அடைஞ்சாச்சி, அடுத்து மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கனும்."

"ஆனா தன் உடம்புல செலுத்தி பரிசோதிக்க யார் முன்வருவாங்க ஆல்பர்ட்??" என்று கேட்டார் மருத்துவர் கிருஷ்ணன்.

அப்பொழுது மருத்துவர் ஆல்பர்டின் அறைக்குள் இரண்டு உயரமான ஆசாமிகள் நுழைந்தனர்.

"வாங்க.. உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இரவு நேரத்துல, ரோடுல இருக்குற பிச்சைகாரங்க,  வயசானவங்க இப்படி உங்க கண்ணுல படுற  யாராவது 2 பேர தூக்கிட்டு வாங்க. பத்தாயிரம் தரேன். ஆனால் எனக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கனும் புரியுதா??"  என்று புருவங்களை உயர்த்தியபடி இருவரையும் கண்களால் ஆராய்ந்தார் மருத்துவர் ஆல்பர்ட்.

சரி என தலையை ஆடிவிட்டு அந்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

"நடக்க கூட உடம்புல தெம்பில்லாம இருக்குற பிச்சைக்கார பசங்கள தூக்கிட்டு வரதுக்கு பத்தாயிரமா? கொஞ்சம் அதிகமா தெரியுதே ஆல்பர்ட்!!" என்றார் மருத்துவர் கிருஷ்ணன்.

"இதுக்கு கம்மியா கொடுக்கனும்னா நாம ரெண்டு பேரும் போய் தூக்கிட்டு வந்தா தான் உண்டு" என்று எரிச்சலுடன் ஆல்பர்ட் கூற, கிருஷ்ணன் எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து சென்றார்.

இரவு மணி – 11

"டேய் சிவா.. வண்டிய கொஞ்சம் வேகமா தான் ஓட்டி தொலையேன். அம்மா வேற சாப்பிடாம எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க."

"காமினி நீ மட்டும் இப்போ 'ஐ லவ் யு' ன்னு சொல்லு, அப்புறம் பார் என் வேகத்த."

"போடா எரும. நேத்து இதையே தான் ஆஃபீசுல ஷீலாகிட்டயும் சொன்னியாமே!!"

"அவ்வ்.. போட்டு கொடுத்துட்டாளா?."

"ஹே சிவா அங்க கொஞ்சம் பாரு. அது மாநகராட்சி (corporation) வண்டி மாதிரியும் தெரியல ஆனா அந்த ரெண்டு பிச்சை காரங்களையும் வலுக்கட்டாயமா ஏத்திக்கிட்டு வேகமா போகுது பாரேன்."

"அட விடு பிச்சைகாரங்க தான!!"

"இல்லை.. எனக்கு ஏதோ தப்புன்னு படுது. நீ அந்த வண்டிய ஃபாலோ
பண்ணு."

"அடிப்பாவி!! அம்மா காத்துகிட்டு இருப்பாங்க சீக்கிரம் போகணும்ன்னு சொன்ன. இப்போ என்னடான்னா பிச்சைக்காரங்கள தொரத்திக்கிட்டு போக சொல்ற??"

"டேய்.. நைநைன்னு பேசாம கொஞ்சம் போயேன். அந்த வண்டிக்கு பின்னாடி."

இருவரும் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். அந்த வாகனம் மருத்துவர் ஆல்பர்டின் மருத்துவமனையை அடைந்ததும், ஏற்றப்பட்ட அந்த இரண்டு பிச்சைக்காரர்களையும் இறக்கி உள்ளே அழைத்து சென்றனர்.

"பார் சிவா. அந்த வண்டியில ஏறும் போது நல்லா இருந்தவங்க. இப்போ மயக்கம் அடைந்த நிலைமையில இருக்காங்க. நான் சொன்னேன்ல சம்திங் ராங்னு."

"இப்போ என்ன பண்றது காமினி??"

"என்ன தான் பண்ணுறாங்கன்னு பார்க்கலாம் வா."

"காமினி.. நாம ஏன் தேவையில்லாம ஏதாவது பிரச்சனைல சிக்கனும்??"

"நாம ரெண்டு பேரும் ரிப்போர்ட்டர்ஸ் அதை மறந்துடாத சிவா."

இரவு நேரம் என்பதால் டூட்டி டாக்டர் மட்டும் ஒரு சில செவிலியர்கள் மட்டுமே மருத்துவமனையில் இருந்தனர்.  நான்கு மாடி கட்டிடத்தில் முதல் இரண்டு மாடிகளில் மட்டுமே மருத்துவமனை செயல்பட்டு வந்தது. மூன்றாவது மாடியில் சில அறைகளில் மருத்துவமனைக்கு தேவைப்படும் ஒரு சில பொருட்கள் மட்டும் இருந்தன. அந்த பிச்சைக்காரர்களை மூன்றாவது மாடிக்கு தள்ளிக் கொண்டு சென்றனர் அந்த ஆசாமிகள்.

காமினியும்,சிவாவும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல அந்த உயரமான ஆசாமிகளுள் ஒருவன் யாராவது பின் தொடர்கிறார்களா என சந்தேகத்துடன் திரும்பி பார்த்தான். வராண்டாவில் யாரையும் காணவில்லை. பின்பு அந்த  இரண்டு ஆசாமிகளும் அந்த பிச்சைக்காரர்களை ஒரு தனி அறையில் படுக்க வைத்து விட்டு மீண்டும் வாகனத்தை நோக்கி செல்ல தொடங்கினார்கள்.

நடப்பது என்ன என்பது புரியாத நிலையில் சிவாவும் காமினியும் முழித்துக் கொண்டிருக்க, மின் தூக்கி வழியாக மருத்துவர்கள் ஆல்பர்ட்டும், கிருஷ்ணனும் வெளியே  வர தொடங்கினர். அதனை சற்றும் எதிர்ப்பார்த்திடாத காமினியும்,  சிவாவும்  என்ன செய்வதென்று புரியாமல் அருகிலிருந்த ஒரு அறையினுள் புகுந்தனர்.

எதையோ உணர்த்த ஆல்பர்ட் அந்த அறையை நோக்கி நடந்து வந்தார். டாக்டரின் காலடி சப்தம் தங்களை நோக்கி வருவதை அறிந்த காமினி மறைந்துக் கொள்ள இடம் தேடினால். ஆனால் அதற்கு ஏதுவாக அந்த அறையில் எந்த ஒரு இடமுமில்லை.

ஆல்பர்ட் அந்த அறையின் கதவுகளை திறக்க முற்பட, கிருஷ்ணன் அவரை விரைவாக வருமாறு அழைத்தார். கதவின் மீது கைகளை வைத்தவர், அதனை விடுத்து கிருஷ்ணனை நோக்கி சென்றார். அந்த இரண்டு பிச்சைக்காரர்களுக்கும் மயக்கம் தெளிய தொடங்கி இருந்தது.

இது தான் சரியான நேரம் என்று கூறி அவர்கள் இருவரின் உடலுக்குள்ளும் PX+  செலுத்தப்பட்டது. இதனை நிருபர்கள் இருவரும் கதவின் துவாரம் வழியாக பார்த்துக் கொண்டிருந்தனர். மருந்தை உடலில் செலுத்திய அடுத்த ஐந்து நிமிடங்களில் அந்த இரண்டு பிச்சைக்காரர்களும் விழித்தனர்.

அதன் பின்பு அங்கே காமினி பார்த்த காட்சி அவளை மிரட்டியது.

PX+ உட்கொள்ளும் நபர் நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டாலும், அவர்களின் மூளைக்கு செல்லும் இந்த மருந்தின் தாக்கத்தால் சுயமாக சிந்திக்க முடியாத நிலைமைக்கு ஆளாவார்கள். அதாவது ஒரு அடிமைப் போல் மற்றவர்களின் கட்டளைக்கு அடிபணிவார்கள்.

"ஓஹ் மை காட். வீ ஹேவ் டு டூ சம்திங் அபௌட் திஸ் சிவா. இது சட்டப்படி குற்றம்".

"இப்போ நம்மகிட்ட எந்த ஒரு ஆதாரமும் இல்ல காமினி. நாம கொஞ்சம் பொறுமையா செயல்பட்டா நிச்சியம் அவங்களை கையும் களவுமா பிடிக்க முடியும்."

சிவா சொல்வது சரி தான் என்பது போல் தனக்குள் எதையோ பேசிக் கொண்டிருந்தாள். மறுநாள் என்ன செய்வது, இதை எப்படி கையாள்வது என்பதிலேயே அவள் சிந்தனை இருந்தது.உடனே தன் அலுவலக சீனியர் பரந்தாமனுக்கு போன் செய்தவள் நடந்ததை விளக்கி கூறினாள். 

அடுத்த நாள் இரவு, கேமராவுடன் மருத்துவமனைக்கு சென்று பிச்சைக்காரர்களை அடைத்து வைத்திருந்த அறையின் பக்கத்து அறைக்கு மருத்துவர்கள் வருவதற்கு முன்பே புகுந்தனர்.

சிவா அந்த அறையில் லேசர் கதிர்வீச்சைக் கொண்டு சுவற்றில் சிறிய கண் போன்ற துளையை உருவாக்கினான். பொறுமையோடு இருந்தவர்கள், அந்த துவாரம் வழியாக டாக்டர்களின் செயல்பாடுகள் அனைத்தையும்  கேமரா மூலம் தெளிவாக பதிவு செய்தனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக சிவாவின் கால்கள் பட்டு ஒரு பிராணவாயு கலன் (ஆக்சிஜெண் சிலிண்டர்) உருள அந்த சப்தத்தை கேட்டு ஆல்பர்ட்டும் கிருஷ்ணனும் அந்த அறைக்கு விரைந்தனர். 

சிவாவும் காமினியும் மூன்றாவது மாடியில் இருந்து கீழே இறங்கி தனித்தனியாக பிரிந்து ஓடத் தொடங்கினார்கள். சிவா மருத்துவமனையிலிருந்து வெளியே தப்பிக்க, அவனை பின் தொடர்ந்து துரத்தினார் ஆல்பர்ட். தன்னால் சிவாவை போல் வேகமாக தப்பிக்க முடியாது என்றுணர்ந்த காமினி தன்னை கிருஷ்ணனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள தரை தளத்தில் நோயாளிகளின் அறையில் புகுந்தாள்.

இரவு நேரம் என்பதால் விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த அறையிலிருந்த  ஜன்னலுக்கு மறுபுறம் 'பார்க்கிங் ஏரியா' இருப்பதை கண்டாள். மருத்துவர் அவளை பின்தொடர்ந்து அந்த அறைக்கு வரக்கூடும் என்பதால் யாருமில்லாத படுக்கையில் ஏறி படுத்துக் கொண்டு அருகில் இருந்த மாஸ்கையும் வயர்களையும் அணிந்துக் கொண்டாள்.

அவளை துரத்திக்கொண்டு வந்த கிருஷ்ணன் அவள் படுத்திருந்த கட்டிலை தாண்டி ஓடினார். டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

தப்பித்து இல்லத்தை அடைந்தவள், சிவாவுக்கு போன் செய்து அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்று அறிந்துக் கொண்டாள். அவனும் தன் இல்லத்தை அடைந்து விட்டதாக கூறவே காமினி நிம்மதி பெருமூச்சி விட்டாள்.

தனது கேமராவை எடுத்து பதிவு செய்யப்பட்டதை பார்த்தவள் மேலும் திடுக்கிட்டாள். மருத்துவர்கள் பேசியவை அந்த கேமராவில் பதிவாகியிருந்தது. அதன் மூலம் மேலும் பல முக்கிய புள்ளிகள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது அவளுக்கு புரிந்தது.  

பரந்தாமனுக்கு போன் செய்து கேமராவில் எடுத்த ஆதாரங்கள் பற்றியும் அவர்கள் துரத்தப்பட்டது பற்றியும் கூறினாள். அமைதியாக அவள் கூறுவதை கேட்டுக் கொண்ட பரந்தாமன், "நீங்க யார்ன்னு அவங்களுக்கு தெரியாதுல?? அவங்களுக்கு உங்கள பத்தின க்ளூ எதையும் விட்டுடலையே??" என்று வினவினார்.

"ஷிட்"  என்று கூறிக் கொண்டு தன் தலையில் அடித்துக் கொண்டவள், "சார் என் ஐ.டி. கார்டை தப்பிக்கும் போது அங்கேயே விட்டுட்டேன்" என்றாள்.

"ஓஹ் காட்.ஹெல்த் மினிஸ்டர் வேற சம்மந்தபட்டிருகார் இதுல. யூ மஸ்ட் பீ வெரி கேர்புள் நவ்.உன்னோட ஐ.டி கார்டு மூலமா உன் வீட்டு முகவரிய அவங்க சுலபமா கண்டுபிடிச்சிடுவாங்க.

இனி நீ வீட்டுல இருக்க வேணாம் உடனே வேற பாதுகாப்பான இடத்துக்கு போ.அப்புறம், அவங்க நாம பேசுறத கூட  ஒட்டு கேட்க ட்ரை பண்ணலாம். சோ இனி கேசட் பத்தி பேசும் போது டைமண்ட்ன்னு சொல்லு. இனி கோட் வோர்ட்ஸ் தான் பயன்படுத்தணும். வெளிப்படையா பேச வேண்டாம்.காலைல சீக்கிரமே ஆபீஸ்க்கு வந்துடு நாம செய்ய வேண்டியத  அங்க பார்த்துக்கலாம்" என்றார் பரந்தாமன்.   

களைப்பும் சோர்வும் உடல் முழுவதும் பரவியிருக்க அவள் கண்கள் அவளை அந்த சோர்விலிருந்து காப்பாற்ற முயற்சி செய்துக் கொண்டிருந்தது.

மறைந்துக்கொள்ள எங்கே செல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.அப்பொழுது சிவாவிடமிருந்து வந்த அந்த தொலைபேசி அழைப்பு அவளுக்கு அதீத எரிச்சலை கொடுத்தது. அடக்கிக் கொண்டு 'ஹலோ' என்றவள், "இப்போவேவா?" என்றாள்.

அவனுடைய அழைப்புக்கு செவி சாய்த்து தனது கேமராவில் பதிவு செய்யப்பட்ட கேசட்டுடன் அவன் அழைத்த இடத்திற்கு அந்த இருளில் சென்றாள். அப்பொழுது மணி மூன்று, சாலைகளில் மனிதர்கள் நடமாட்டமின்றி ஒரு சில மாடுகள் மட்டுமே திரிந்துக் கொண்டிருந்தன.சிவாவின் பைக் சப்தம் அவளை நெருங்கியது.

"உனக்கு எதுவும் ஆகலையே?" என்று காமினியை நோக்கி கேட்டான் சிவா.

"எப்படியோ கேமராவோட தப்பிச்சிட்டேன் பட் என் ஐ.டி. கார்ட அங்கயே விட்டுட்டேன். எனிவேஸ்,இப்போ நமக்கு தேவையான அனைத்து ஆதாரங்களும் கிடைச்சிடுச்சி" என்றாள் சிரித்தபடியே.

"அதுமட்டுமில்ல இதுல நிறைய முக்கிய புள்ளிகளும் சம்மந்தப்பட்டிருக்காங்க." 

"அப்படியா,யார் அது??" என்று புருவத்தை உயர்த்தினான் சிவா.

"ஹெல்த் மினிஸ்டர் மிஸ்டர். அன்புராஜ்."

"இப்போ அடுத்து என்ன செய்றதா பிளான்??"

"நாளைக்கு இந்த ஆதாரத்த மக்கள் முன் வெளியிடப் போறோம்.  மக்களுக்கு இதை பத்தி தெரிஞ்சாகனும். அப்போ தான் அரசாங்கமும் அவங்க மேல நடவடிக்கை எடுக்கும். நம்மளாலும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும்."

"லிசன் காமினி. உயிரை பனயம் வச்சி இந்த காரியத்த பண்ணியிருக்கோம். கொஞ்சமாவது காசு பாக்கனும்னு உனக்கு தோனலியா??"

"வாட் டூ யு மீன்?? "

"ஐ மீன். வீ கேன் மேக் சம் மணி!! மினிஸ்டர் மற்றும் டாக்டர்ஸ இந்த  காசெட் வச்சி மெரட்டி காசு பார்க்கலாமே!!"

"நோ!! காசுக்கு ஆசைப்பட்டு நான் இதை செய்யல."

"ப்ளீஸ் காமினி,டோன்ட் மேக் மீ வைல்ட். கிவ் மீ தி காசெட்".

வாக்குவாதம் பெருகி தொடர்ந்து காமினி அவனுக்கு செவி சாய்க்க மறுக்கவே, "ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை" என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

அந்நேரம் அந்த ஏரியாவில் ரோந்திலிருந்த போலீஸ் வாகனம் சற்று தூரத்தில் வர, சிவா என்ன செய்வதென்று புரியாமல் அங்கிருந்து மெல்ல ஓட தொடங்கினான்.

காமினியும் அங்கிருந்து உடனே அகன்று தன்னுடைய தோழியின் இல்லத்திற்கு சென்று விடியும் வரை அடைக்கலம் புகுந்தாள். பிறகு ஆட்டோ பிடித்து அலுவலகம் சென்று  பரந்தாமனை சந்தித்து கேசட்டை கொடுத்தாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

"ஹா ஹா நீங்க இன்னும் டைமண்டை மறக்கல போல.. ஆனா,போலீஸ் கண்ணுல மண்ணை தூவிட்டுன்னு சொன்னீங்களே அதான் என்னன்னு புரியல??

"ஆமாம். மினிஸ்டர் நேற்று இரவு உங்க ரெண்டு பேரையும் கண்டுபிடிக்க சிட்டி முழுக்க ரோந்துல இருந்த போலீஸ்காரங்ககிட்ட சொல்லியிருக்கார்."
    
    "ஓ!!"        

Thursday, September 30, 2010

அமைதிப் படை

'பிரபலம் ஆன முன்? பிரபலம் ஆன பின்?'

"பிரபலாகும் முன் நிறைய நண்பர்களுடன் கும்மி. பிரபலமான பின் சில தோழர்களுடன் மட்டும் கும்மி."

'எப்படி பிரபலம் ஆகனும் என்ற எண்ணம் வந்தது?'

"அது காலத்தின் கட்டாயம். நான் என் வாதத்திற்கு எதிர் வாதம் செய்பவர்களை காயப்படுத்தனும் என்று தான் முதலில் நினைத்தேன்."

'ஓ! அப்புறம் என்ன ஆச்சு?'

"நான் என்ன கதையா சொல்றேன். அப்புறம் விழுப்புரம்".

'உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் போல!!'

"ஆமாம். சின்ன வயதில் இருந்தே அப்படி தான். இப்படி தான், ஒரு தடவ..... "

'சரி சரி. உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் தான். ஏற்றுக் கொள்கிறோம். காலத்தின் கட்டாயம் என்று சொன்னீர்களே!! அது என்ன?'

"நான் அன்பால் அனைவரையும் என் வழிக்கு கொண்டு வந்து விடுவேன். தவறு செய்தவர்கள், செய்யாதவர்கள் என்று பாரபட்சமின்றி அனைவரையும் மன்னித்து விடுவேன். அது என் நண்பர்களுக்கு தெரியும்."

'ஓ!! நீங்க ரொம்ப நல்லவங்க போல?'

"ஆமாம். எப்பவுமே அப்படி தான்."

'ஆனால் நீங்க ஒரு தடவை பொங்கியதாக செய்தி தாளில் பரபரப்பாக வந்ததே!'

"ஆமாமாம். நீங்க அதை படிச்சீங்களா?"

'உலகமே படிச்சுதாக அறிக்கை ஒன்று சொல்கிறதே!'

"படிச்சாங்களா.. படிச்சாங்களா? அதுக்கு தான் சப்ப மூலப் பிரச்சனையோடு.. சம்பந்தமே இல்லாத பூதகரமான பிரச்சனை சும்மா நுழைத்து வைத்தேன்."

'கேட்கவே சுவாரஸ்யமாக இருக்கே!! அப்புறம்?'

"சும்மா பத்திக்கிச்சு இல்ல. பூதகர பிரச்சனையில் எதிர்வாதம் புரிந்தவர்களை சிக்க வைத்ததால், படிப்பவர்களும் ஒன்றும் புரியாமல் குழம்பி போய் எனக்கு ஒரே ஆதரவு தான் போங்க!!"

'பரவாயில்லை. சுலபமாக பிரபலம் அடைந்து விட்டீர்கள் போல!!'

"அட நீங்க வேற. எனது பொங்கல் இரண்டாம் நாளே பிசுபிசுத்து விட்டது."

'நிஜமாவா? ஐயோ பாவம்.'

"ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஓடினேன் ஓடினேன்."

'ஐய்யோ.. வாழ்க்கையின் எல்லைக்கா?' 

"இல்லைங்க சிந்தனையின் எல்லைக்கு."

'ஓ!'

"நியாயம் கேட்டு பலரை அணுகினேன்.  உதவ யாருமே முன் வரல. தட்டினேன் புத்திய. தீட்டினேன் திட்டத்த."

'என்ன திட்டங்க இது?'

"சத்தம் போடாதே என்பதையே சத்தம் போட்டு தான் இங்க சொல்ல வேண்டியிருக்கு. அதனால ஊர்லயே பெரிய சவுன்ட் சர்வீஸ்காரங்க கிட்ட போனேன்."

'அற்புதமுங்க.'

"அங்க போன சவுன்ட் சர்வீஸ்காரங்க ப்ரெண்ட்சும் இலவசமா வந்து சத்தம் போடுவாங்க."

'பிரபலம் ஆக பிறர் பலமும் தேவைப்படுதுன்னு சொல்லுங்க!!'

"அது மட்டும் போதாதுங்க. நாம முன் வைக்கிற உப்பு சப்பில்லாத விஷயத்த வைத்து எவ்வளவு நேரம் தான் போராட முடியும். முதல் முயற்சியே தோல்வி தானே!!"

'ஆமாமாம். என்ன பண்ணீங்க?'

"என்ன தற்காத்துக் கொள்ள ஒரு கவசம்."

'என்ன கவசமுங்க அது!!'

"சொன்னா புரியாது. உங்களுக்கு புகைப்படமா காண்பிக்கட்டுமா?"

'பரவாயில்ல் இருக்கட்டும். நீங்க விஷயத்த மட்டும் சொல்லுங்க. யாரும் உங்கள கேள்வி எல்லாம் கேட்க மாட்டாங்களா?'

"இங்க தான் நீங்க சவுன்ட் சர்வீஸ்காரங்களோட இராஜ தந்திரத்த பார்க்கனும். ஆளுக்கு ஒரு மூளையில் போய் நின்னுக்கிட்டு, தேய்ந்த ரெக்கார்டை காது கிழியுற அளவுக்கு போட்டுடுவாங்க. அதனால் எதிராளி.. எப்படி கேள்விக் கேட்டாலும் வெளில கேட்காது. அவங்க சோர்வடையும் பொழுது, நாங்க ஒரு கேள்வி கேட்போம். எதிராளிங்க பதிலே சொல்லல என்று கும்பலா எங்களுக்குள்ள சிரிச்சுக்குவோம்."

'யப்பா.. சாணக்யர் கெட்டாரு போங்க. நிறைய கத்துக்கனும் உங்ககிட்ட இருந்து.'

"நல்ல சமயத்துல உதவின சவுன்ட் சர்வீஸ்காரங்க.. எனக்கு ஆத்திகவாதிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் போல!! அவங்க கிட்ட போனவுடன் எல்லாரும் அலற ஆரம்பிச்சிட்டாங்க."

'ஓ!!'

"அவங்களுக்கு தான் எல்லாம் புகழும் சேரும்."

'இதை எல்லாம் மீறி யாருமே உங்கள கேள்வி கேட்கலியா?'

"அதெப்படி விடுவாங்க. அங்க இங்கன்னு வந்து ஏதாவது சொல்லிக்கிட்டு தான் திரியுமுங்க."

'எப்படி சமாளிச்சீங்க?'

"ஹிஹி.. இதென்ன பெரிய விஷயம். ஆதாரம் கேட்போம்."

'ஆதாரம் கொடுத்துட்டா?'

"சின்னக் கொழந்த மாதிரி கேள்விக் கேட்டுக்கிட்டு... எவ்ளோவோ சமாளிக்கிறோம். இதென்ன பெரிய விஷயமா? ஆதாரத்தில் பெரிய ஓட்டை என்று நொட்டை சொல்லுவோம்."

'இது போதுமா?'

"போதாது தான்."

'ஐய்யோ.. சஸ்பென்ஸ் தாங்களா!! சீக்கிரம் சொல்லுங்களேன்.'

"கே. பாலசந்தரின் 'இரு கோடுகள்' பாணியை.. கோயபெல்ஸ் எப்படி உபயோகம் பண்ணியிருப்பார்?"

'புரியலியே!!'

"அவங்க ஆதாரத்த பற்றி சுலபமா மறந்துட்டு.. அதை விட பெருசா ஏதாவது திரிய கொளுத்தி போட்டுட்டு, திரும்ப திரும்ப.. திரும்ப திரும்ப அதை பத்தியே பேசுவோம்."

'அவங்க எதுவும் பேச மாட்டாங்களா?'

"எப்படி பேசுவாங்க? கேள்வி மட்டும் தான் கேட்போம். அப்புறம் எல்லாத்தையும் இழுத்து பூட்டிட்டு வேலைக்கு பார்க்க போயிடுவோம்."

'ஓ!!'

"பாவம். அவங்களும் மனுஷங்க தானே!! பூட்டின வீட்டு முன் கத்திட்டு ஓஞ்சி போயிடுவாங்க. நாங்க மீண்டும் கூடி.. சொம்புக்களை காணோம் என்று சிரிச்சுப்போம். இத சொல்றப்பவே எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது."

'நல்ல பொருத்தமான பெயரு தான் உங்களுக்கு.'

"நான் இந்த பேட்டியை சிலருக்கு டெடிகேட் பண்ண விரும்புறேன்."

'கண்டிப்பா பண்ணலாம். யார் யாருக்கெல்லாம்?'

"ஏழர மணிக்கு அவசரமா ஆஃபீசுக்கு போகனும் என்று பஸ்ல போகும் பொழுது, எனக்கு அர டிக்கெட் கிழித்துக் கொடுத்த கன்டக்டருக்கு, பல கேள்விக்குறிகளாக சில கெட்டவன்கள் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது.. நான் இறங்க வேண்டிய ராஜா தியேட்டர் ஸ்டாப்பிங்கில் எழுப்பி விட்ட அட்டையம்பட்டிக்காரருக்கு.. எனக்கு இனாமா சவுன்ட் சர்வீஸ் உபயோகிக்க தந்தவங்களுக்கு. இப்போதைக்கு இவ்வளவு தான்."

'அவ்ளோ தானா.. வேற யாராச்சும் இருக்காங்களா?'

"அப்புறம் எனக்கு ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும்."

'வேற ஏதாவது உலகத்திற்கு சொல்ல விரும்புறீங்களா?'

"ஆமாம். நான் ஆயிரம் தடைகள் கடந்து வந்த முள் பாதைகளை நினைத்து பார்க்கிறேன்."

'ஐய்யோ.. முள் மேலயா நடந்து வந்தீங்க?'

"நான் நடந்து வந்த பாதையில ஓரமா முள் இருந்துச்சு. சும்மா கேள்விக் கேட்காதீங்க!! அப்புறம் சவுன்ட் சர்வீஸை உங்க வீட்டுக்கு முன்னாடி ஒலிக்கும்."

'அவ்வ்.. வேணாமுங்க. நீங்க சொல்லுங்க கேட்டுக்கிறேன்.'

"இனி இந்த சமூகத்தில் எந்தவொரு அப்பாவிக்கும் எதுவும் நடக்க விட மாட்டேன். போராடுவேன். நான் அடுத்த தலைமுறையினருக்கு பாடமாக இருக்கேன். நமது மன அமைதிக்காக, நாம் ஒரு மாதம் முன்பு மன்னித்தவர்கள் மேலே போர் எடுக்கலாம். மன அமைதி வேண்டுமெனில், என்னை எப்ப வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நமக்கு பின்னாடி சவுன்ட் சர்வீஸ் எப்பவும் இருப்பாங்க."

'உங்க அமைதிப்படையின் செயல்பாடுகள் மெய் சிலிர்க்க வைக்கிறது.'
டிஸ்கி - நண்பன் சாம்ராஜ்யப்ரியனின் (Mr.RDIN) "பூக்காரி" சிறுகதை போல.. உரையாடல்களாலேயெ ஒரு சிறு முயற்சி.


 

Wednesday, September 29, 2010

புன்னகையின் பின்னால்

“எப்படியோ கஷ்டப்பட்டு கம்பெனியோட நொய்டா ஆஃபீசுல இருந்து சென்னை ஆஃபீசுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டீங்க..இப்போ சந்தோஷம் தானே?” என்று புன்னகையுடன் கேட்டாள் ரோகினி.

"ஏன்? உனக்கு சந்தோஷமா இல்லையா என்ன??  நானும் அங்க 4 வருஷமா இருந்துட்டேன். இப்போ உன்ன என் தலையில கட்டிட்டாங்க, எனக்கும் அத ஒரு காரணமா காட்டி சென்னைக்கு வர வசதியா போச்சி" என்றான் விஜய்.

"எப்படியோ நான் வந்த நேரம்,நீங்க ஆசை பட்டமாதிரி நடந்திருக்கு பாருங்க."

"சரி சரி. இப்படி செண்டிமெண்டா பேசியே அனுப்பிடலாம்னு பாக்காத. இட்லிய கொண்டா சாப்டு ஆஃபீசுக்கு ஓடுறேன்."

சென்னைக்கு மாற்றமாகி முதல் நாள் அலுவலகம் சென்றான் விஜய். எதிர்பார்ப்புகளோ கனவுகளோ அதிகமின்றி காணப்பட்டான். நான்கு வருட அனுபவங்கள் அவனுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருந்தது. 

அவனது புது அலுவலகத்தில் சுதர்ஷன் என்பவரை சந்தித்த விஜய் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான்.

சுதர்ஷன், விஜய்காக ஒதுக்கப் பட்டிருந்த இருக்கையை அவனுக்கு காண்பித்தார். இருக்கையில் அமர்ந்த விஜய் ஒரு முறை அலுவலகத்தை சுற்றும் முற்றும் பார்த்தான். பழகிய முகம் என்று எதுவும் அவனுக்கு தெரியவில்லை.

விஜய்யின் அருகில் அமர்ந்திருந்த பிரகாஷ், “ஹாய், என் பெயர் பிரகாஷ்.நீங்க தான விஜய்?” என்றான்.

“யெஸ்" என்று புன்னகைத்தாண் விஜய்.

“நல்லது. நீங்க வரப் போறதா ஏற்கனவே சொன்னாங்க. இனி நாம ஒரே டீம்ல தான் வொர்க் பண்ண போறோம்” என்றான் பிரகாஷ்.

“ஒஹ்ஹ க்ரேட். மொத்தம் எத்தனை பேர் இந்த டீம்ல??”

“இப்போதைக்கு மொத்தம் பதினைஞ்சு. பதினொரு மணிக்கு மீட்டிங் இருக்கு.அப்போ டீம் லீடும் மத்தவங்களும் வருவாங்க."

“எல்லாரையும் சந்திக்க இதுதான் எனக்கும் சரியான இடம்” என்று கூறி தற்காலிகமாக விடை பெற்றுக் கொண்டான் விஜய் .

சரியாக 10.55 க்கு அனைவரும் மீட்டிங் அறையில் ஒன்று கூடி டீம் லீடர் செந்திலின் வருகைக்கு காத்துக் கொண்டிருந்தனர்.


“செந்தில் ஏதோ முக்கியமான போன் கால்ல இருக்கார் போல,அதான் இன்னும் வரல. ரொம்ப திறமையானவர்,3 வருட அனுபவம் தான் அதுக்குள்ள டீம் லீட் போஸ்ட்க்கு வந்துட்டார். ஜாலியா பழகக் கூடியவர்“ என்று விஜய்யின் அருகில் அமர்ந்திருந்த பிரகாஷ் கூறிக் கொண்டே இருக்க, அறையை நோக்கி வந்துக் கொண்டிருந்த செந்திலை பார்த்தான் விஜய்.

அதுவரை எந்த ஒரு சலனமும் இல்லாமல் இருந்த அவன் முகம் வியர்க்கத் தொடங்கியது. முகத்தில் ஏதோ எரிச்சல், குழப்பம் என்று அனைத்து உணர்சிகளும் தென்பட்டன.

'அய்யோ இவனா?? இந்த செந்திலா?? இவன் கீழயா நாம வேலை செய்யப் போறோம்?? இவன காலேஜ்ல படிக்கும் போது எத்தனை நாள் ராகிங் பண்ணியிருக்கேன்!! அது மட்டுமா கிளாஸ்ல பூந்து எல்லார் முன்னாடியும் அவன அடிச்சி இருக்கேனே? அவ்வ்வ்.. இது வேலைக்கு ஆகாது. வேற கம்பனிக்கு மாறிட வேண்டியது தான்' என்று தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

அறைக்குள் நுழைந்த செந்தில்.. விஜய்யை நோக்கி அழகாய் புன்னகைத்தான்...

Tuesday, September 21, 2010

பிறந்த நாள் பரிசு

"ன்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?"

"திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?"

"இல்ல.. நாளைக்கு உன் பிறந்த நாள் வேற, எதாவது பிளான் இருக்குமே!! அதான் கேட்டேன்."

"அப்படி பிளான் இருந்திருந்தா லீவ் கேட்டு நானே உங்ககிட்ட வந்திருப்பேனே சார். எங்கயும் போகல நாளைக்கும் ஆபீஸ் வருவேன்."

"வேணும்னா நாளைக்கு லீவ் எடுத்துக்கோ. ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா சனிக்கிழமை வொர்க் பண்ணி காம்பென்செட் பண்ணிடு."

"எனக்கு அப்படி ஒரு லீவ் தேவையே இல்ல சார், நான் வரேன்."


 
"டேய் பாஸ்கர், நான் அருண் பேசுறேன்டா. நீ எங்க  இருக்க??"

"இப்போ  தான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். ஏன்டா?"

"உனக்காக நாங்க விக்னேஷ் வீட்டு மொட்ட மாடியில வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமா வந்து சேர்." 

"10 நிமிஷத்துல இருப்பேன்."

"டேய் அருண். போன்ல அவன் என்னடா சொன்னான்?"

"இப்போ தான் ஆபீசுல இருந்து வீட்டுக்கு வந்தானாம். ஒரு 10 நிமிஷத்துல இங்க வரேன்னு சொல்லி இருக்கான்டா."

"பக்கத்து தெருவுல இருக்குற என் வீட்டுக்கு என்ன மேக்கப் போட்டுகிட்டு வர போறானா? அப்புறம்,டேய் அருண் அவன் வந்ததும் நீ தான்டா நாளைக்கு பிளான் பத்தி அவன் கிட்ட பேசனும்."

"ஆமாடா நான் அவன் கிட்ட வாய் கொடுத்து வாங்கி கட்டிக்கனும். அத பார்த்து நீங்க எல்லாரும் சிரிக்கனும்ம். இதானே உன் பிளான்? நான் பேசல. வேணும்னா சையத்த பேச சொல்லு."

"கொய்யாலே சப்ப மேட்டர் இது. இதுக்கு போய் ஓவர் சீன் போட்டுகிட்டு.. அவன் வரட்டும்டா நானே பேசுறேன்."

"இதுக்கு தான்டா கூட நீ இருக்கனும்னு சொல்றது. பாஸ்கர் வந்ததும் நீயே பேசுடா சையத்."

"வாப்பா பாஸ்கர். எப்படி இருக்க?"

"நல்லா இருக்கேன்மா.. விக்னேஷ்ஷ்ஷ்?"

"அந்த கொரங்கு மத்த கொரங்குங்க கூட மொட்ட மாடியில தான் அரட்ட அடிச்சிகிட்டு இருக்கு நீயும் போய் சேர்ந்துக்கோ."

" (அவ்வ்வ்வ்வ்வ்) சரிமா."

"டேய் அப்படியே அங்க வச்சிருக்குற வாழ பழத்தையும் மேல எடுத்துட்டு போய் எல்லார்க்கும் கொடு."

'இதுவேறயா!' 

"இங்க பார்டா வரும் போதே நமக்காக பாசமா பழம் எல்லாம் கொண்டு வரான்."

"பாசமா ?? எனக்கா ??.. மேல இருக்கற கொரங்குங்க எல்லாத்துக்கும் கொடுக்க சொல்லி உங்க அம்மா தான்டா கொடுத்து அனுப்பினாங்க."

“கொரங்கா?? டேய் விக்னேஷ் இதுக்கு தான் வேற எங்கயாவது மீட் பண்ணலாம்ன்னு சொன்னேன்.. இது எனக்கு பெருத்த அவமானம்டா.”

"டேய்  இங்க பாருங்கடா ஆப்பிசர் அருண்க்கு கோவம் வருது. ஓவரா சீன் போடாமா மூடிட்டு பழத்த சாப்டு டா."

"சரி விஷயத்துக்கு வருவோம். நாளைக்கு என்ன பிளான்டா?"

"ஒரு பிளானுமில்ல. ஏன்டா?? "

"என்ன இப்படி கேட்டுட்ட? உன் பிறந்த நாள் வேற.. நாங்க நிறைய பிளான் வச்சிருக்கோம்."

"ச்சே.. ச்சே.. கேக் எல்லாம் கட் பண்ணி காசு வேஸ்ட் பண்ணாதீங்கடா எனக்காக. "

"ஐய ஆசை தான்.. உனக்கு யார் இப்போ கேக் கட் பண்ண போறதா சொன்னது. எங்களுக்கு சரக்கு வேணும் ஸ்பான்சர் பண்ணு."

"க்ர்ர்ர்ர்.. சரக்கா?? நானா!! பிச்சிபுடுவேன் பிச்சி.. சரக்குக்கு எல்லாம் நான் வெட்டி செலவு பண்ண மாட்டேன்."

"டேய் அப்படி எல்லாம் சொல்லிடாதடா. உன்ன தான் மலை போல நம்பி இருக்கோம். சரக்கு நாக்குல பட்டு வாரம் ஒன்னு ஆயிடுச்சிடா.. நீ எங்க நண்பேன்ல, கொஞ்சம் யோசிச்சி சொல்லுடா."

"நான் காசு போட்டு ஏன்டா உங்க உடம்ப கெடுக்கணும். எனக்கு மனசு வரல. வேற எதாவது கேளுங்க."

"தத்துவம் எல்லாம் பேசி காரியத்த கெடுத்துடாதடா. வேற ஒன்னும் வேணாம் மச்சி. நீ சரக்கு ஸ்பான்சர் பண்ணு. சைடு டிஷ்க்கு நான் உஷார் பண்ணிக்குறேன்."

"ஹ்ம்ம்.. வாழ்க்கையோட அருமை உங்களுக்கு இப்போ சொன்னா புரியாது. என்னமோ பண்ணுங்க.. நாளைக்கு 7 மணிக்கு ரெடியா இருங்க. ஆபீஸ் விட்டு வந்து உங்கள கூட்டிட்டு போறேன். சரியா!!"

"நீ எங்க உண்மையான நண்பேன்டா."

றுநாள் மாலை 7 மணிக்கு..

"என்னடா எல்லாரும் நான் எப்போ வருவேன்னு ரெடியா நிக்குறீங்க போல."

"இல்லையா பின்ன.. அப்புறம் உன்னோட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு இதெல்லாம் மறக்காம எடுத்துகிட்ட இல்ல ?"

"வந்து தொல எல்லாம் இருக்கு."

"ரெண்டு பைக் நாலு பேரு. சரிவா எந்த "பார்"க்கு போறதுன்னு நானே சொல்றேன்."

"விக்னேஷ் நீ ஒன்னும் சொல்ல வேணாம். நான் முன்னாடி போறேன். நீ பேசாம என்ன பின்தொடர்ந்து வா." 

"டேய் உனக்கு எதாவது பார்ல அக்கௌன்ட் இருக்கோ?? சரி நீ பார்ட்டி தர எங்க கூப்டாலும் வர்றோம். ஆனா சர்வீஸ் நல்லா இருக்கனும்."

"டாய் படுத்தாதடா. எல்லாம் நல்லா தான் இருக்கும். வா போலாம்."

"டேய் சையத். இவன் எங்கடா போயிட்டு இருக்கான். இந்த ஏரியால பாரே இருக்குற மாதிரி தெரியலையே!!"

"எனக்கும் அதே யோசனையா தான் இருக்கு. பின்னாடியே போவோம். போய் தான் பாப்போம் வா."

பாஸ்கர் வாகனத்தை அன்பு இல்லம் என்னும் ஆசிரமத்தின் முன் நிறுத்தினான்.

"டேய் என்னடா இங்க வந்து நிறுத்துற? என்ன ஆச்சி உனக்கு!!"

"பேசாம உள்ள வாடா சையத். எல்லாம் புரியும்."

அனைவரும் பாஸ்கரை பின் தொடர்ந்து சென்றனர். 

"ஹலோ பாஸ்கர் வா வா. எப்படி இருக்க?? இவங்க எல்லாம் யார் உன் பிரெண்ட்சா??"

"ஆமாம் சார்."

"வெரி குட். வெரி குட். நான் தான்பா சிதம்பரம் இந்த ஆசிரமத்துக்கு மேனேஜர்" என்றார் மற்றவர்களை நோக்கி.

“டேய் இந்த ஆளை பாக்கவாடா எங்கள இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்த ?? “ என்று பாஸ்கரின் காதில் கிசுகிசுத்தான் விக்னேஷ்.

"இவர பார்க்க கூட்டிட்டு வரல. இங்க இருக்கற பசங்கள பாருங்க. 100 குழந்தைங்க கிட்ட இருக்காங்க இங்க."  

"ஒரே ஒரு குழந்தை கிட்ட மட்டுமாவது 10 நிமிஷம் பேசி பாருங்க. அவங்களுக்குள்ள இருக்கற ஏக்கம்,எதிர்பார்ப்பு எல்லாமே புரியும்டா. அவ்ளோ ஏன்டா.. பேச கூட வேணாம். அன்பா அவங்கள பார்த்து ஒருதடவ சிரிச்சா அதுவே போதும்."

"என்ன பாஸ்கர்.. பிரெண்ட்ஸ் என்ன சொல்லறாங்க??"

"ஒண்ணுமில்ல சார். சும்மா பேசிட்டு இருந்தோம்."

"இந்தாங்க 25,000 ருபாய். இப்போ என்னால முடிஞ்சது இது. எல்லார்க்கும் ரெண்டு நாள் சாப்பாட்டுக்கு ஆகட்டும். வேற எதாவது வேணும்னா தயங்காம கேளுங்க சார். நான் இன்னும் உங்களுக்கு செய்ய வேண்டியது நிறைய இருக்கு."

"ஹாஹா நிச்சியமா பாஸ்கர். உங்கிட்ட கேட்காம வேற யார்கிட்ட கேட்க போறேன்."

"தேங்க்ஸ் சார். நான் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போறேன்."

"ஓஹ் தாராளமா." 

"டேய் டேய் என்னடா நடக்குது இங்க?? நீ எப்போடா பாஸ்கர் இப்படி மாறின??"

"எப்போ என்னோட வாழ்க்கையை இங்கிருந்து தான் ஆரம்பிச்சேன்னு தெரிஞ்சிதோ அப்போ."

Wednesday, September 8, 2010

அழுமூஞ்சி விளையாட்டு

சீதாவிற்கு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, அவங்க ஊரை பற்றியே யோசனையாக இருந்தது. ஏன் அவங்க ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இல்லை என்றும், தான் ஏன் அத்தை வீட்டில் தங்கி படிக்க வேண்டும் என்றும் எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு இது மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.
பெற்றோர்களை பிரிந்து இருந்த  ஏக்கம் தானோ என்னவோ,சராசரி குழந்தையை போல் அல்லாமல் ஏதோ ஒரு வேற்று உலகில் வாழ்வது போல் இருப்பாள். படிப்பிலும் கொஞ்சம் மந்தம் தான்.அவளது ரேங்க் கார்டில் சிகப்பு மை பேனாவினால் எழுதபட்டிருந்த "NIL"  என்பது என்ன என்று கூட புரியாது இருந்தாள்.

அவள் அத்தை மகன் குமார் எப்பொழுதும் துறு துறு என்று சுற்றிக்கொண்டிருப்பான். இருவரும் ஒரே பள்ளியில் தான் மூன்றாவது படித்து வந்தனர். சிறு வயதில் குழந்தைகளுக்கு சொந்தமான துடிப்பும் சுட்டி தனமும் அவனிடத்தில் நிறைந்து கிடந்தது. சீதாவுக்கு அவன் நேர் எதிர்.

பள்ளி முடிந்த பின், சீதாவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த குமாரின் கண்களை கடந்து சென்றது அந்த தும்பி. அதனை பிடிக்கும் நோக்கத்துடன் பின் தொடர்ந்த குமாருக்கு அவன் முதுகில் சுமந்து சென்ற மூட்டை  முட்டுக்கட்டையாக அமைந்தது.

இருவரும் வீட்டை அடைந்ததும் அவர்களுக்கு பால் மற்றும் சிற்றுண்டிகள் கொடுக்கப்பட்டது. அதனை உண்ட இருவரும்,செல்வி மிஸ்ஸின் வீட்டுக்கு டியூஷனுக்கு செல்ல தயாராக, அவளுக்கு அந்த இன்ப  அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

அவளது அம்மா அப்பா, அவள் தம்பி சரவணனுடன் அவளை காண வந்தனர். ஒரு புத்துணர்ச்சி அவள் முகத்தில் காண முடிந்தது. அவளுள் எழுந்த அந்த மகிழ்ச்சியை அவள் அடக்கிக் கொள்ள முயற்சிக்கவில்லை. ஓடி வந்தவள் தன் அம்மாவை அணைத்துக்கொண்டாள்.

"வாங்க.. வாங்க" என்று அவர்களை உள்ளே அழைத்தார் சீதாவின் அத்தை.

சீதாவின் அம்மா அப்பாவுக்கு தண்ணீர் கொடுத்த சீதாவின் அத்தை"இன்னைக்கு வரதா சொல்லவே இல்லை" என்றார்.

"ஒரு விசேஷத்துக்கு வந்தோம் அதான் அப்படியே இவளையும் பார்த்துட்டு போகலாமேன்னு வந்துட்டோம் வீட்டுக்கு" என்றார்.

கொஞ்சலாக தன் தந்தையிடம், "இன்னைக்கு டியூஷன் போகாம விட்டுடவா ??" என்றாள்.

அதெல்லாம் கூடாது என்று அவள் அம்மா சொல்வதற்குள், அவள் தந்தை சரி போக வேண்டாம் என்றார்.

குமார் மட்டும் சீதாவை முறைத்தவாரே டியூஷனுக்கு புறப்பட்டான்.

சரவணன்
அழத் தொடங்கினான். அப்பொழுது தான் அவள் பார்வை தம்பியின் மீது திரும்பியது. சரவணனுக்கு இரண்டு வயது தான் ஆகிறது. அவள் தன் தம்பியுடனும் அதிக நாட்கள் கழித்ததில்லை. அதனால் தானோ என்னவோ அவன் மேல் மிகுதியான பாசம் அவளுக்கு.

அவனை தூக்கிக்கொண்டு  கொஞ்ச நேரம் சுற்றி வந்தாள்.ஆனால் அவன் அடம்  பிடித்ததின் காரணமாக அவனை  அம்மாவிடம்  கொடுக்க  நேர்ந்தது.

அம்மாவின்
பின்னாடியே கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி வந்தாள்.அம்மாவிடம் சமர்த்தாக இருந்த தம்பியின் கன்னத்தை மெல்ல கிள்ளினாள்.


மேலும்  விளையாட்டாக  முகத்தை  மூடிக்  கொண்டு அழுவது  போல்  நடித்தால்அதை  நடிப்பென்று  அறிந்து  அவன்  சிரிக்க தொடங்கினான். அதையே தொடர்ந்து செய்தவாறு இருந்தாள் . ஒரு  கட்டத்தில்  எறும்பு  கடித்ததோ  என்னவோ,  சரவணன் அழத்  தொடங்கிவிட்டான்.

பயந்து போய் அங்கிருந்து ஓட தொடங்கியவள் அப்பாவிடம் அடைக்கலம் புகுந்தாள். அவர் அவளுக்கு புது ஆடை ஒன்றையும் ஜியோமெட்ரி பாக்ஸ் ஒன்றையும் தந்தார் .

செல்லமாக தந்தையின்  கன்னத்தில் ஒரு முத்தமிட்டு அதனை வாங்கிக் கொண்டு, நேராக அறைக்கு ஓடி சென்று அந்த புது ஆடையினை உடுத்திக்கொண்டாள். பிறகு அப்பா முன் வந்து நின்று அழகாக சிரித்தாள்.

"அட வள்ளி.. என் செல்லக்குட்டிக்கு இந்த டிரஸ்ல எவ்ளோ அழகா இருக்கு பாரேன்!!"

அம்மா அவளை கவனிக்காமல்,அழுதுக் கொண்டிருந்த சரவணனை சமாதானம் படுத்திக் கொண்டிருந்தாள்.சீதாவுக்கு இது கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது.அமைதியாக அப்பாவின் மடியில் போய் அமர்ந்துக் கொண்டாள்.

அப்பா அவள் படிப்பை பற்றி பேச தொடங்கியது தான் தாமதம்,உடனே என்னை மிஸ் அடிச்சிகிட்டே இருக்காங்க எனக்கு ஸ்கூல் போகவே பயமா இருக்கு என்று அடிக்கிக்கொண்டே சென்றாள்.ஒரு வழியாக அவளை சமாதானம் படுத்துவதற்குள் இரவு உணவு தயாரானது .

அன்றிரவு தூங்கும் பொழுது அம்மா அப்பா இருவருக்கும் இடையே படுத்துக்கொண்டாள்.அவளுக்கு தூக்கம் வருவது போல் தெரியவில்லை.அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள்.

"என்னங்க,கொழந்தைக்கு உடம்பு சுடுதுங்க.காய்ச்சலா என்னன்னு தெரியல? தண்ணி எதாவது ஒத்துக்கலையா?? இதுக்கு தான் இவள வந்து பார்க்க வேணாம் அப்படியே ஊருக்கு போயிடலாம்ன்னு சொன்னேன்.இப்போ பாருங்க யார் தூக்கிட்டு அலையறது ஹாஸ்பிடலுக்கு?" என்றார் வள்ளி.


வந்ததிலிருந்து  தன்னை  எதுவும்  கண்டுக் கொள்ளாமல்  சரவணனை  மட்டுமே கொஞ்சிக் கொண்டிருந்தது சீதாவுக்கு கோவத்தை  உண்டாக்கியது. அழத் தொடங்கினாள். அவளால் வேறென்ன செய்திட முடியும்?


மெல்ல தந்தையிடம்,"நாளைக்கு நானும் உங்களோடவே ஊருக்கு வந்துடவா?" என்றாள்.

இவள் மெல்ல பேசியது அவள் அம்மாவின் காதிலும் விழுந்து விட்டது."எங்க கூடவே வந்துட்டா.படிப்பு என்ன ஆகறது ??அதெல்லாம் இப்போ வேணாம்.அரையாண்டு பரீட்சை முடியட்டும் அப்புறம் ஊருக்கு கூட்டிட்டுப் போறோம்" என்றார் அவள் அம்மா.

தேம்பிக்கொண்டே இருந்தவள் மேலும் அழத் தொடங்கிவிட்டாள்.அவள் அழுகையை   நிறுத்த அவள் தந்தைசரி  எங்களோட உன்னையும் ஊருக்கு கூட்டிட்டு போறோம்"  என்றார்.

உடனே மனதுள் பல கனவுகளோடு உறங்கினாள்.என்றும் 7 மணிக்கு எழும் சீதா அன்று ஏனோ 6.30 க்கு விழித்துக் கொண்டாள்.அவள் பக்கத்தில் படுத்திருந்த அம்மாவும் அப்பாவும் அங்கே இல்லை.

வேகமாக  எழுந்து  அறையை  விட்டு  வெளியே  வந்தாள்.

அம்மாவும்  அப்பாவும்  தம்பியுடன்  ஊருக்கு  செல்ல  தயாராகி  பேருந்து  நிறுத்ததிற்கு  புறப்பட்டனர். வீதியில்  அவர்கள் நடந்து செல்ல அவர்கள் பின்னால் அழுதுக் கொண்டே ஓடத்  தொடங்கினாள் சீதா. அவள் விழித்துக் கொண்டதை யாரும் கவனிக்கவே இல்லை.

என்ன செய்தாலும் இப்பொழுது சமாதனம் செய்ய முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்த அவள் அத்தை, அவளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

அவள் கதறிக்கொண்டே இருக்க அவர்கள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடந்துக் கொண்டிருந்தனர்.

அம்மாவின் தோளில் சாய்ந்துக் கொண்டிருந்த சரவணன், அவன் அக்கா அழுவதை பார்த்து சிரித்தான். பாவம் அவனுக்கு எங்கே தெரியும் இது விளையாட்டல்ல என்று!!